மழைக் காலங்களில் குடை மறந்து போவதற்காய் நானும்,
குடைக் காலங்களில் வர மறந்து போவதற்காய் மழையும்,
அலுத்துக் கொள்வதைப் போல,
எப்போதாவது பேச வாய்க்கிற தருணங்களில்
வார்த்தைகள் மறந்து போவதற்கு
நாம் ஏன் அலுத்துக் கொள்வதே இல்லை.
கவிதைகளும் கவிதை சார்ந்த இடமும்...
தவறான முடிவுகளிலிருந்து
சரியான தொடக்கத்தைஅடைந்துவிட்டோம்.
கற்பிதங்கள் கலைந்துபோன
அற்புதத் தருணம் இது.
மெல்ல மெல்ல ஒரு வெற்றிடம்
அடர்ந்த காற்றழுத்த மண்டலமாகிவிட்டது.
மழையில் நனையக் காத்திருப்போம்.
இசைக் குறிப்புகளைப் பார்த்து
ஏன் மிரட்சி கொள்கிறாய்?
கண்மூடி ரசி, போதும்.
மேலும் சப்தங்களை வெறுக்காதே
ஒழுங்குபடுத்தப்பட்ட சப்தங்கள்தான் இசை.
மின்சாரக் கம்பிகளில் தொங்கும்
மைனாக்களின் கூடுதான் வாழ்க்கை.
சிக்கலான பல விஷயங்கள்
நேர்த்தியானவையும் கூட,
மைனாக்களின் கூட்டைப் போல.
நீ நினைப்பதைப் போல
எல்லா வளைவுகளும் முடிவுகள் அல்ல.
பயணித்துப் பார்ப்போம்.