Thursday, June 26, 2008

இனிய லோனா...


பருவகாலங்களைப் போலவே உறவுகளும்
கூவும் குயிலாய், அனல் காற்றாய், உறைய வைக்கும் குளிராய்
அது நம்மை கடந்து செல்கிறது.

கைவிடப்பட்ட உறவுகள் காற்றில் அலைகின்றன
பாலித்தின் கவர்களைப்போல.

சாஸ்வதமற்றவை மற்ற எதையும் போல.

மீண்டும் வர நேராத பயணிகளோடு

சென்று மறைகிற ஒரு ரயிலைப் போல
காலத்தில் உறைந்து போகிறது உறவு...

பொருள்சார் வாழ்வின் மரண நாவுகள்
உறவுகளைத்தான் விரும்பித் தீண்டுகின்றன.

லோனா,

நாம் பகிர்ந்து கொண்டதைவிட பகிராமல் விட்டது அநேகம்.

ஒரு சிலந்தி வலையின் நேர்த்தியோடும்,
ஒரு மைனாக்கூண்டின் அழகியலோடும்
அது இருக்கவில்லை,
எனினும் அது ஒரு நதியைப்போல் இயல்பானதாய் இருந்தது.

வார்த்தையும் வாழ்க்கையும் இன்னும் மிச்சமிருக்கிறது.
சந்திப்போம் தோழனே...