Wednesday, July 25, 2007

மீட்சியின் கனவு வழிகிற கண்கள்

ஊழிப் பெருங்காற்றில்
ஒரு எரியும் மெழுகை
சுருங்கிய கைகளில் பொத்தும்
ஒரு பெண்ணின் சித்திரம்
உனை ஞாபகப்படுத்துகிறது அம்மா.

நெருப்பில் உன் உள்ளங்கை
வேகின்ற வாசனை...
நான் பதறுகிறேன்

நீ சொல்கின்றாய் எப்பொழுதும் போல,
"ஒன்றுமில்லை".

அன்பும் துயரமும்
மீட்சியின் கனவும்
வழிகின்ற உன் கண்கள்
ஒரு வடுவெனத் தங்கிப்போகிறது மனதில்.